புனே: முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் செகாவத் நேற்று மரணமடைந்தார். முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் கணவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தேவிசிங் செகாவத் (89) கடந்த சில நாட்களுக்கு முன் காலை நடைபயிற்சியின் போது கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து புனேவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் அவருக்கு பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். தேவி சிங் செகாவத்துக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தேவிசிங் செகாவத் மகாராஷ்ரா மாநிலம் அமராவதி மாநகராட்சியின் முதல் மேயராகவும், கடந்த 1985ம் ஆண்டு எம்எல்ஏவாகவும் பணியாற்றியுள்ளார். தேவிசிங் மறைவிற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,காங்கிரஸ் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.